
செல்போனில் வரும் தேவையில்லாத குறுந்தகவல்களை (எஸ்.எம்.எஸ்) தவிர்க்க, வாடிக்கையாளர்கள் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (ட்ராய்) அழைக்காதீர்கள் பதிவேட்டில் அவர்களது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்துள்ள நிலையிலும் சில வாடிக்கையாளர்களுக்கு விளம்பரதாரர்களிடமிருந்து தேவையல்லாத அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் செல்போன் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 86 கோடியாக உள்ளது. இவர்களில் 16 கோடி பேர் மேற்கண்ட பதிவேட்டில் அவர்களது செல்போன் எண்களை பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்துள்ள நிலையிலும் தேவையில்லா அழைப்புகள் எவ்வாறு வருகிறது ?
விளம்பரதாரர்கள் கோடிக்கணக்கான தனி நபர்கள் அல்லது வெளிநாட்டினர்கள் வாயிலாக குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். இவர்கள் அமெரிக்கா அல்லது வெளிநாடுகளில் உள்ள சர்வர்களின் வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றின் வாயிலாக ஒரு வினாடிக்கு 2000 குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். இதன் காரணமாக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வரும் கோடிக்கணக்கான குறுந்தகவல்களை கட்டுப்படுத்துவது சிரமமாகும்.
இதனை கட்டுப்படுத்த 'ட்ராய்' எடுத்த நடவடிக்கை என்ன ?
இது போன்று விதிமுறைகளை மீறி செயல்படும் விளம்பரதாரர்களுக்கு விதிக்கப்படும் அபராத கட்டணத்தை ரூ.2.5 லட்சம் வரை 'ட்ராய்' சென்ற மாதம் உயர்த்தி உள்ளது. இந்த விளம்பரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் சேர்பதற்கான வழிமுறை ஒன்றையும் அறிமுகப்படித்தி உள்ளது.
மேலும், விளம்பரதாரர்களுக்கு 140-ல் தொடங்கும் தொலைபேசி எண்களை வழங்கியுள்ளது. இதனால், இந்த எண்களை வைத்து வாடிக்கையாளர்கள் இது விளம்பரதாரர்கள் அழைப்பு என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம். விதிமுறைகளை மீறிய 1122 விளம்பரதாரர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி உள்ளது. 111 பேரின் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளது. வரம்பு மீறியவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளது.
தேவையில்லாத அழைப்புகளை கட்டுப்படுத்த வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் ?
தேவையில்லாத விளம்பர அழைப்புகள் வராமலிருக்க, வாடிக்கையாளர்கள் 'ட்ராய்' அமைப்பின் அழைக்காதீர்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக 1909 என்ற எண்ணை டயல் செய்யவும் அல்லது இந்த எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும்.
இதன் பிறகும் தேவையில்லாத அழைப்புகள் வந்தால், அந்த தகவலை அனுப்பிய விளம்பரதாரரின் பெயர், தொலைபேசி எண், தகவல் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பப்பட்ட தகவலை பற்றிய சுருக்கமான விளக்கம் போன்ற தகவலை உங்களது செல்போன் சேவை நிறுவனத்தோடு தெரிவிக்க வேண்டும். உங்களது புகார் குறித்து செல்போன் சேவை நிறுவனக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்பும்.
நன்றி:தினத்தந்தி 26.11.11
தேடித்தந்தவர்: B.முஹம்மது இம்தியாஸ், குறிச்சிமலை, தஞ்சை வடக்கு.
-------------------------------------------------------------------------------------------------
நன்றி:தினத்தந்தி 26.11.11
தேடித்தந்தவர்: B.முஹம்மது இம்தியாஸ், குறிச்சிமலை, தஞ்சை வடக்கு.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !